கீழக்கரை: கீழக்கரையில் கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாக மன்னார் வளைகுடா பகுதி உள்ளது. ஏர்வாடி கடல் பகுதியான பிச்சைமூப்பன் வலசையை மையப்படுத்தி ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் தீவை போன்று அமைந்துள்ள மணல் திட்டு வரை கண்ணாடிப் படகுகளில் சென்று காண்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் தொடங்கப்பட உள்ள இந்த திட்டத்திற்காக இரண்டு விசைப்படகுகள் கீழக்கரை கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு படகில் 16 பேர் அமர்ந்து கடலின் அழகை ரசிக்கவும், படகில் அமர்ந்தபடி கடல் கீழ் பகுதியை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது கொரோனா தாக்கத்தினால் இச்சுற்றுலா இன்னும் செயல்படுத்த வில்லை. விரைவில் இந்த படகுகள் ஏர்வாடி கடல்பகுதிக்கு எடுத்து செல்லபட்டு சுற்றுலா தொடங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு கடலுக்கடியில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள், பவளப்பாறைகள் உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரடியாகக் கண்டு மகிழ வாய்ப்பாக இருக்கும்.